Tuesday, June 22, 2010

இங்கிலாந்து ஏழைகளுக்குக் கல்விக்கண் திறந்த இந்துப் பண்பாடு

---- by அரவிந்தன் நீலகண்டன்

அண்மையில் ஒரு கிறிஸ்தவ பிரச்சாரக் கூட்டத்துக்கு செல்லும் சூழல் ஏற்பட்டது. அங்கே ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் மேடையில் சிவாஜி கணேசனை மிஞ்சிக் கொண்டிருந்தார்; நடித்தும், கர்ஜித்தும், அதற்கும் மேலே போய், பேய் ஆராசனை ஆடி கிறிஸ்தவ மத வெறியை ஆவேசமேற்றிக் கொண்டிருந்தார். கன்னியாகுமரி மாவட்ட இடதுசாரி இயக்கங்களில் மதச்சார்பற்றவர் என பிரசித்தி பெற்றவர் அவர் !

அவர் சொன்ன விஷயத்தின் சாராம்சம் இதுதான்:

வெள்ளைக்காரர்களும் கிறிஸ்தவ பாதிரிகளும் இங்கு வந்து கல்வி சேவை செய்யாமலிருந்திருந்தால் இந்த மனுவாத பிராம்மணீய இந்து மதம் நம்மையெல்லாம் கல்வியறிவில்லாத மூடர்களாகவேதான் வைத்திருக்கும். இன்றைக்கு இந்த மண்ணின் கீழ்த்தட்டு மக்களுக்குக் கல்வி கிடைத்திருக்கிறது என்றால் அது கிறிஸ்தவமும் மிஷினரிகளும் போட்ட பிச்சை.

இது பல நேரங்களில் பல மேடைகளில் பேசிக் கேட்ட விஷயம்தான். உண்மையைத்தானே சொல்கிறார்கள். நம்முடைய சமுதாயத்தில் கல்வியைக் கீழ்த்தட்டு மக்களுக்குக் கொடுப்பதில் தடை இருக்கத்தானே செய்தது. எனவே அவர்கள் சொல்வதில் என்ன தவறு என்றுதான் பெரும்பான்மையான ஹிந்துக்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.

ஆனால், உண்மை என்ன என்பதைச் சிறிது ஆழமாக வரலாற்றைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். வரலாறு என்றால் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து வரலாற்றைச் சொல்லவில்லை. கடந்த இருநூறு - முன்னூறு ஆண்டுகளுக்குள் நடந்த வரலாற்றைச் சற்று உன்னிப்பாகக் கவனித்தாலே போதும்.

ஆண்டு 1807. இடம் இங்கிலாந்து பாராளுமன்றத்தின் பொதுமக்கள் மன்றம் (House of Commons). இங்கிலாந்தின் பிரபல விஞ்ஞானியான டேவிட் கில்பர்ட் பேசுகிறார்:

“உழைக்கும் மக்களுக்குக் கல்வியைக் கொடுப்பதால் என்ன நலன் விளையப் போகிறது? அதனுடைய இறுதியான முடிவு உழைப்பாளிகளின் ஒழுக்கத்துக்கும் சந்தோஷத்துக்கும் கெடுதலாகத்தான் அமையும். அவர்களுக்கென்று சமுதாய அடுக்குமுறையில் விதிக்கப்பட்டுள்ள விவசாய வேலையையும் இதர கடும் உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளையும் திருப்தியுடன் செய்யாமல், அவர்கள் தங்கள் வாழ்க்கை நிலையை அதிருப்தியுடன் பார்க்கக் கல்வி கற்றுக் கொடுத்துவிடும். அடங்கி இருக்காமல் துடுக்குத்தனமாகவும் இஷ்டம் போலவும் நடக்க அவர்கள் தலைப்படுவார்கள்…கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான பிரச்சாரங்கள் வெளியீடுகள் ஆகியவற்றை அவர்கள் படிக்க அது வழி வகுத்துவிடும்.”[1]

இது ஒரு தனிமனிதரின் கருத்தல்ல. பொதுவான ஐரோப்பிய பண்பாட்டின் மனப்பான்மை என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. ஏனெனில், உடல்-உழைப்பு ஒரு இறைத் தண்டனையாகக் கருதப்பட்ட மதச்சூழல் அங்கு நிலவி வந்தது.

ஆனால், இதை ஏற்க முடியாதபடி ஐரோப்பிய வரலாறு குறித்த நமது அறிதலில் மற்றொரு பெரிய தவறு ஒன்று இருக்கிறது. நம் வரலாற்றாசிரியர்களிடம் கூட அது இருக்கிறது.

மத்தியகால ஐரோப்பா இருளில் மூழ்கியிருந்தது. அந்த இருள் விலகக் காரணம் புரோட்டஸ்டண்ட் மதச் சீர்திருத்தவாதிகளே என்ற நம்பிக்கையே அந்த அறிதலில் உள்ள தவறு.

இங்கு நாம் இந்தத் தவறான எண்ணத்தை சரி செய்ய வேண்டியுள்ளது. புரொட்டஸ்டண்ட் மத இயக்கம் சீர்திருத்த கிறிஸ்தவமாக வரலாறுகளில் காட்டப்படுகிறது. ஆனால், வரலாற்றில் அது பிற்போக்குத்தனமான அடிப்படைவாத இயக்கமாகவே நடந்து கொண்டது. அது அடித்தள மக்களுக்கு எதிரானதும் ஆகும். கடைநிலை மக்களின் வாழ்க்கையை கடைத்தேற்ற இந்த புரோட்டஸ்டண்ட் சீர்திருத்தவாதிகள் எதுவும் செய்யவில்லை என்பதுதான் உண்மை.

அவர்கள் கணக்கெல்லாம் எப்படி பரம்பரை பிரபுக்களையும் இளவரசர்களையும் கத்தோலிக்கப் பிரிவில் இருந்து தமது பிரிவுக்குத் திருப்புவது என்றுதான் இருந்தது; அதைத் தவிர்த்து, கிறிஸ்தவ இறையியலும் சட்டமும் பிறப்படிப்படையில் அடக்கி ஒடுக்கி வைத்திருந்த பாட்டாளிகளையோ விவசாயிகளையோ விடுதலை செய்வதில் அவர்கள் கவனம் இருக்கவில்லை. இதற்கு மிகத் தெளிவான உதாரணம் சொல்ல முடியும்.

மேல்சாதி ஐரோப்பியரால் கசக்கி பிழியப்பட்ட விவசாயிகள் கொதித்தெழுந்து புரட்சியில் ஈடுபட்ட போது அவர்களுக்கு எதிராகவும்,ஐரோப்பிய மேல்சாதியினருக்கு ஆதரவாகவும் புரோட்டஸ்டண்ட் பிரிவின் பிதாமகரான மார்ட்டின் லூத்தர் ஒரு சாதி வெறி பிடித்த பிரசுரத்தை வெளியிட்டார். ஐரோப்பிய ஆதிக்க சாதிகளுக்கும் அவர்களுடைய வீரர்களுக்கும் இந்த பிரசுரம் அக்காலத்திலேயே பரவலாக விநியோகிக்கப்பட்டது. அதில் லூத்தர் கூறினார்:

“விவசாயிகள் வெளிப்படையான கலகத்தில் ஈடுபட்டால் அவன் கிறிஸ்தவ ஆண்டவனின் அருள் சட்டத்துக்கு வெளியே சென்று விட்டான். … இந்த காரணத்தினால் அந்த கலகக்கார விவசாயியை யாருக்கெல்லாம் முடிகிறதோ அவர் ஒவ்வொருவரும் போய் வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும், குத்த வேண்டும் - இதை இரகசியமாகவோ வெளிப்படையாகவோ செய்ய வேண்டும். ஏனென்றால், கலகக்காரனைப் போல விஷமான பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பிசாசுத்தனமான வேறெவனும் இருக்க முடியாது. கலகக்கார விவசாயியைக் கொல்வது என்பது ஒரு வெறிபிடித்த நாயைக் கொல்வது போலத்தான்.” [2]

frankenhausen_massacre

லூத்தரின் அறிவுரை வெறும் காகித அறிக்கை இல்லை. அது ஐரோப்பிய மேல்சாதியினரால் அப்படியே சிரமேற்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

ப்ராங்ஹௌஸன் (Frankhausen) என்னும் ஒரு இடத்தில் மட்டும் பரம்பரையாகக் கிறிஸ்தவம் அடிமைப்படுத்தி வைத்திருந்த விவசாயக்குடிகள் 5000 பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டனர்.

லூத்தர் இதில் மிகுந்த ஆனந்தம் கொண்டார். அவர் எக்களிப்புடன் கூறினார்:

“மார்ட்டின் லூத்தராகிய நானே இக்கலகத்தில் விவசாயிகளைக் கொன்று ஒழித்தேன். ஏனென்றால், நானே அவர்களை (விவசாயிகளைக்) கொல்லும்படி (மேல்சாதியினரைத்) தூண்டினேன். அவர்களின் இரத்தம் என் தலையின் மீது உள்ளது. ஆனால், அதற்கு ஆண்டவனே பொறுப்பு. ஏனென்றால், நான் சொன்னதெல்லாம் ஆண்டவன் எனக்கு ஆணையிட்ட அவரது இறைவார்த்தைகளையே.” [3]

லூத்தரன் கிறிஸ்தவம் மீண்டும் மீண்டும் விவசாயிகள் மேல்சாதியினருக்கு அடிமை வாழ்க்கை செய்வதையே வலியுறுத்தியது.

சரி, கல்வி விசயத்துக்கு மீண்டும் வரலாம். 1808 வரை ஏழைக் குடியானவர்களுக்குக் கல்வி தரும் அமைப்பே இங்கிலாந்தில் கிடையாது. 1808 இல் தான் பிரிட்டிஷ் அரசாங்கம் விவசாய உழைப்பாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் கல்வி வழங்குவதற்காக ஒரு அரசு அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது கூட அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தினால் அல்ல. அப்படியானால், இவ்வமைப்பின் நோக்கம் என்ன?

பொதுக்கல்விக்காக அரசாங்கம் வழங்கும் நிதிகளைக் கண்காணிக்கும் குழுவின் முதல் செயலாளரான கே ஷட்டில்வொர்த் (Kay-Shuttleworth அதாவது ‘Sir’ James Kay-Shuttleworth, ‘1st Baronet’) கூறுகிறார்:

“இந்த பள்ளிகள் மூலம் கடுமையாக உழைக்கும், (மேல்சாதியினருக்கு) விசுவாசமுள்ள, மதநம்பிக்கையுள்ள, மரியாதை காட்டும், எப்போதும் சிரித்தபடி இருக்கும் ஒரு புதிய உழைக்கும் இனத்தை உருவாக்க முடியும்.” [4]

இது 1846 இல்.

மதவாதிகள் சும்மா இருப்பார்களா? மக்களைக் கட்டுப்படுத்த கல்வி நல்ல வழி என்பது தெரிந்ததும் அதில் பாய்ந்து குதித்தார்கள். கிறிஸ்தவத்தின் ஆதிக்கத்தில் இருந்த கீழ்சாதி ஐரோப்பிய ஏழைகளோ கல்வி என்ற ஏதோ ஒன்று கிடைத்ததே என்று இவ்வமைப்புக்குச் செல்ல ஆரம்பித்தார்கள்.

அது நிலவுடமைச் சமுதாயத்திலிருந்து இயந்திர யுகத்துக்கு மாறிக்கொண்டிருந்த காலகட்டம் வேறு. அதனால், நிலக்கரி சுரங்கங்கள் மிகுந்த கார்ன்வால் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் 1858 இல் மட்டும் அங்கே 40,000 குழந்தைகள் மெதாடிஸ்ட் கிறிஸ்தவ சபையின் ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்குச் சென்றார்கள். ஆனால், அங்கே ஒரே ஒரு பள்ளியில் மட்டும்தான் எழுதச் சொல்லிக் கொடுப்பதாக குழந்தைத் தொழிலாளிகள் குறித்த கணக்கெடுப்புப் பதிவு செய்துள்ளது. நாட்டிங்காம் நகரில் இதே ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின் படி ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்குச் சென்ற குடியானவர் சாதி குழந்தைகள் 22. இதில் படித்த 17 குழந்தைகளுக்கு எழுத்தறிவு கிடையாது. [5]இதுதான் பிரிட்டிஷ் கல்வியின் தரம் இருந்த நிலை.

காஸ்கெல் என்பவர் இந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளிக் கல்வியின் ஒரே விளைவு “ஒழுக்கக் கட்டுப்பாடு” போதிக்கப் பட்டதுதான் என்கிறார். [6]

இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள் எப்படி தேர்வு செய்யப்பட்டார்கள்? கார்ன்வால் நிலக்கரி சுரங்கப் பகுதி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் குழந்தைத் தொழிலாளர்களுக்கும் கல்வி சொல்லிக் கொடுக்கும் பள்ளிக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவரின் “தகுதி” குறித்து அளிக்கப்பட்ட நற்சான்றிதழ் ஒன்றைப் பார்க்கலாம்:

“இன்று கல்விச் சாலைகளில கற்பிக்கப்படும் அறிவியல்கள் எதுவும் ஜான் ராபர்ட்ஸுக்கு தெரியாது. என்றாலும், அதையெல்லாம் விட முக்கியமான ஒரு விஷயம் அவருக்குத் தெரியும். ஜீவன்களை ரட்சிக்கும் ஏசு கிறிஸ்துவின் போதனைதான் அது. அவர் ஒவ்வொரு நாளும் மனதை உருக்கும் தீவிர பிரார்த்தனையுடன் போதனையைத் தொடங்குகிறார். அதே போல உள்ளத்தை உருக்கும் போதனையுடன் முடிக்கிறார். [7]

இது பட்டணங்களில் பிரிட்டிஷ் மேல்சாதியினருக்கு அளிக்கப்பட்ட கல்வி என்பது சொல்லாமலே பெறப்படும் உண்மை.

இத்தகைய பள்ளிகளில் படித்த ஒரு மாணவர் அங்கு தாம் கற்ற கல்வியை இப்படி நினைவு கூர்கிறார்:

“கீழ்படிதலைக் குறித்து, உண்மையாக இருப்பதைக் குறித்து எங்களுக்குக் கற்றுத் தந்தார்கள். எப்போதும் ஆண்டவர் நம்மை கண்காணித்துக் கொண்டே இருக்கிறார் என்று கற்றுத் தந்தார்கள். அப்புறம் ஒரு கொடூரமான ஆளைக் குறித்து கற்றுத் தந்தார்கள், அதுதான் சைத்தான். கீழ்ப்படிதல் இல்லாத பிள்ளைகளையெல்லாம் சைத்தான் பிடித்துக் கொண்டு போய் தீக்குள் போட்டுக் குத்தீட்டியால் குத்தி வாட்டி எடுப்பான் என்று சொல்லித் தந்தார்கள்.” [8]

இதே போன்ற கல்வி முறைதான் பிரிட்டிஷாரால் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. இந்தக் கல்விமுறை இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட அதே சமயம், பிரிட்டிஷ் நாட்டுக் கல்வி முறையை வேறு ஒரு கல்வி முறை மாற்ற ஆரம்பித்திருந்தது. 1820களிலிருந்து, குறிப்பாக, லண்டனிலும் அதைச் சுற்றி இருந்த வட்டாரங்களிலும் இந்தப் புரட்சிகரக் கல்வி மாற்றம் அலையடித்துப் பரவிக் கொண்டிருந்தது. இந்த கல்வி அலைவட்டம் இங்கிலாந்தில் பரவியது குறித்து, அது எங்கிருந்து வந்தது என்பது குறித்து எல்லாம் விளக்கமாகப் பின்னால் பார்க்கப் போகிறோம்.

ஆனால், அதே காலகட்டத்தில் பாரதத்தில் நிலவிய கல்வி எத்தகையது?

நவீனகாலத்துக்கு முற்பட்ட எல்லா நாட்டுச் சமுதாயங்கள் போலவே பாரத சமுதாயத்திலும் ஜனநாயகமற்ற சூழல் நிலவியது எனலாம். இங்கு பிறப்படிப்படையிலேயே பொதுவாக சமுதாயம் இயங்கியது. ஆனால், முக்கியமான வேறுபாடு உண்டு. அது என்னவென்றால் தரமான கல்வியானது அனைத்து தள மக்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு பாரதத்தில் மேற்கத்திய நாடுகளைக் காட்டிலும் சிறப்பாகவே அமைந்திருந்ததே.

இந்த பாரம்பரிய பாரதக் கல்வி, அடித்தள மக்களை அடிமைகளாக்கும் சமுதாய கட்டுப்பாட்டுக் கருவியாக செயல்படவில்லை. மாறாக சமுதாய தேக்கநிலைகளைக் கருத்தியல் சார்ந்து எதிர்க்கும் இயக்கங்களை உருவாக்கும் கலகக்கரு கொண்டதாக அமைந்தது.

narayanaguruஉதாரணமாக, ஸ்ரீ நாராயண குருவை எடுத்துக் கொள்ளலாம். தமது வீட்டில் நடத்தப்பட்ட திண்ணைப் பள்ளியிலேயே குருவிடம் இருந்து தமிழ் சமஸ்கிருதம் மலையாளம் ஆகியவற்றைப் படித்தார். பக்தி இலக்கியங்களையும் வேதாந்த சாஸ்திரங்களையும் வைத்திய வித்தையையும் திண்ணைப் பள்ளியில் படித்த நாராயண குருதான் சமுதாய மறுமலர்ச்சிக்கான ஆன்மிகப் புரட்சிக்கு வித்திட்டார்.

பாரத வரலாற்றில் மட்டுமே சமுதாய தேக்கநிலையும் அதிகார அந்தஸ்து குவிப்பும் ஆன்மிக கருத்தியல் அடிப்படையில் தொடர்ந்து எதிர்க்கப்பட்டு வந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இங்குள்ள கல்வி முறை ஒற்றை கல்வி-முறையாக இல்லாமல், அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல், மக்கள் சமுதாயங்களிடமிருந்ததே.

அன்றைய ஐரோப்பாவுடனான ஒப்பீட்டளவில் கல்வி பல விதங்களில் பல வழிமுறைகளில் இந்தியவில் ஜனநாயகப் படுத்தப்பட்டிருந்தது. இன்று நாம் கொண்டிருக்கும் ஒரு நவீன ஐதீகம் பண்டைய இந்தியாவில் கல்வி ஒரு சாதியினரின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது. ஆனால், பண்டைய இந்தியா முதல் 17 ஆம் நூற்றாண்டு இந்தியா வரை கல்வி எந்த ஒரு சாதியின் கட்டுப்பாட்டிலும் இருக்கவில்லை.

ஒரு சில குலம் சார்ந்த தனிப்பட்ட வித்தைகள் மட்டுமே அந்தந்த சாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. கல்வியறிவு, எழுத்தறிவு, கணித அறிவு, அடிப்படை மருத்துவ அறிவு, வட்டார தாவரவியல் அறிவு, இலக்கிய-இலக்கண அறிவு போன்றவை மிகப் பரவலாக அனைத்து மக்களுக்கும் இருந்தன.

மேற்கத்திய பண்பாட்டிலோ, விடுதலை உணர்ச்சி கொடூரமாக மத அமைப்பினரால் அமுக்கப்பட்டது. அங்கு ஜனநாயகம் என்பது கல்வியால் ஏற்படவில்லை. கருத்தியல் சாராமல் முழுக்க முழுக்க பொருளாதார விரிவாக்கத்தினாலேயே ஏற்பட்டது. எனவேதான் மேற்கத்திய ஜனநாயகம் அதிகச் செலவு பிடிக்கும் விஷயமாக உள்ளது. அதை அதே பொருளாதாரச் செழிப்புடன் வாழ வைக்க வளரும் நாடுகள் தொடர்ந்து பெரிய விலையைக் கொடுத்து வருகின்றன.

இந்த உண்மையைத் தன் உள்ளுணர்வால் அறிந்து முதன் முதலாகச் சொன்னவர் மகாத்மா காந்திதான். 1931 இல் அவர் இங்கிலாந்து சென்றிருந்த போது அங்கிருந்த மேல் வர்க்க பிரிட்டிஷார் அவரிடம்,

“நாங்கள்தானே இந்தியாவுக்குக் கல்வி அறிவைக் கொண்டு வந்தோம். நன்மை செய்த எங்களை நன்றியில்லாமல் வெளியேறச் சொல்கிறீர்களே” என்றார்கள்.

இதற்கு காந்தி அளித்த பதில் மிக முக்கியமானதாகும்.

gandhi2என்னுடைய தரவுகள் புள்ளிவிவரங்கள் வெற்றிகரமாக எதிர்க்கப்படலாம் எனும் அச்சம் சிறிதும் இன்றி நான் ஒரு விஷயத்தை சொல்ல முடியும். இன்று (பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருக்கும்) இன்றைக்கு ஐம்பது அல்லது நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பாரதம் நிச்சயமாக இன்று பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் இந்தியாவைக்காட்டிலும் அதிக கல்வியறிவுடையதாக இருந்தது. இதே சூழ்நிலை பர்மாவுக்கும் பொருந்தும். ஏனெனில், பிரிட்டிஷ் நிர்வாகிகள் பாரதம் வந்த போது இங்கிருந்த அமைப்புகளை மேம்படுத்துவதற்கு பதிலாக, அதை அப்படியே எடுத்து அதனை வேருடன் பிடுங்கி எறிய ஆரம்பித்தார்கள். மண்ணைத் தோண்டி வேரைப் பிடுங்கினார்கள். (பாரதத்தின் பாரம்பரியம் என்னும்) அழகிய மரம் அழிந்தது.

அங்கிருந்த ஐரோப்பியர்கள் மகாத்மா காந்தி கூறியதை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. டாக்கா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான ஸர் பிலிப் ஹார்ட்டாக் காந்தியின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கினார். ஆவண ஆதாரங்களைக் கேட்டார். அடுத்த எட்டு வருடங்களாக காந்திக்கும் அவருக்கும் கடிதப் போக்குவரத்து இருந்தது. இக்காலகட்டங்களில் பெரும்பாலான நேரம் காந்தி சிறையில் இருந்தார். ஹார்ட்டாக் தீவிரமாக ஆவணங்களை ஆராய்ந்து காந்தியின் நிலைப்பாட்டை எதிர்த்து பிரிட்டிஷாரே நல்ல கல்வியை இந்தியாவுக்கு கொண்டு வந்தார்கள் என இலண்டன் கல்வி நிறுவனத்தில் ஒரு பேருரைத் தொடர் ஆற்றினார். 1939 இல் இது ஒரு நூலாக ஆவண ஆதாரங்கள் இணைக்கப்பட்டு காந்தியின் நிலைப்பாட்டுக்கான மறுப்பாக வெளிவந்தது. காந்திக்கு இதனை விரிவாக மறுக்க நேரமில்லை. அவர் விடுதலைப் போராட்ட சுழலின் மையத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

kancheepuram1960களில் ஒரு ஆராய்ச்சியாளர் இந்த விஷயங்களில் மீண்டும் ஆர்வம் காட்டலானார். அவர் காந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர் தரம்பால்.

அவர் பழைய ஆவணங்களை நுணுகி ஆராய்ச்சி செய்தார். ஹர்ட்டாக் பயன்படுத்திய அதே ஆவணங்களையும் அத்துடன் அவர் புறக்கணித்த இதர பழைய ஆவணங்களையும் தேடித் துருவி ஆராய்ந்தார். அவற்றைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டார். ஹிந்து தேசியவாதியான சீதாராம் கோயல் அதனைத் தமது பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார். அந்த நூல்தான் “The Beautiful Tree” - “ஒரு அழகிய மரம்”.

ஆம், எப்படி பாரத பாரம்பரிய கல்வி முறை ஒரு அழகிய கல்பக தருவாக இந்த தேசத்தில் விளங்கியது என்பதை அந்தப் புத்தகம் வெளிக்கொணர்ந்தது. கீழே கொடுக்கப்பட்டுள்ள சுருக்கமான விவரங்கள் இந்நூலிலிருந்து எடுக்கப்பட்டவை.

1818 இல் மராட்டிய பேரரசு வீழ்ந்தது. 1819 இல் பேஷ்வா அரசு இருந்த பிராந்தியங்களில் அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் அறிக்கை கூறுகிறது:

“ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் எழுதப் படிக்க கணக்கு வழக்குகளைச் சரிபார்த்து வைத்துக் கொள்ளத் தெரிந்த மக்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.” [9]

1821 இல் தானா மாவட்டத்தில் கணக்கெடுத்த திரு. ப்ரெண்டர்காஸ்ட் என்கிற கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி எழுதுகிறார்:

நாம் ஆக்கிரமித்துள்ள பிராந்தியத்தில் ஒரு கல்விச்சாலையாவது இல்லாத ஒரு சிறிய கிராமம் கூட இல்லை. பெரிய கிராமங்களிலோ பல கல்விச்சாலைகள் இருக்கின்றன. நகரங்களிலோ மிகவும் திறமையான முறையில் எல்லா இடங்களிலும் இளம் சிறார்கள் கல்வி பயில்கிறார்கள்…கணக்கு வழக்குகளைத் திறமையாக கவனித்து பேணத் தெரியாத ஒரு விவசாயியையோ சிறுவர்த்தகரையோ காண முடியவில்லை. நம் நாட்டில் உள்ள இதே தரத்தில் வாழும் மக்களைக் காட்டிலும் இவர்கள் சிறப்பாக எழுத்தறிவும் எண்ணறிவும் பெற்றிருக்கிறார்கள். உயர் வியாபாரிகளோ எந்த பிரிட்டிஷ் வியாபாரிக்கும் சமமான அறிவு பெற்றிருக்கிறார்கள். [10]

arya_bhatta

இந்த குறிப்பு எழுதப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷாரால் ஒரு பெரிய செயல்திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி, இந்தியக் கல்வியறிவு குறித்தும் இந்திய பாரம்பரிய கல்வி அமைப்புகள் குறித்தும் மிகப் பெரிய அளவில், பிராந்தியம் பிராந்தியமாக, மாவட்ட வரிவசூலிப்பு அதிகாரிகளால் (கலெக்டர்களால்) அக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கல்விச்சாலைகளுக்கு அனுப்பப்படுவதையும் பதின்மூன்று வயதுக்குள் இந்த மாணவர்கள் பலதுறைகளில் அதீதப் புலமையுடன் இருப்பதையும் (“their acquirement in the various branches of learning are uncommonly great”) சென்னையின் கலெக்டர் முர்ரே குறிப்பிடுகிறார். ஆண்டு:1822. [11]

இதே போன்றதொரு கருத்தை வட ஆர்க்காடு கலெக்டர் வில்லியம் கூக் குறிப்பிடுகிறார். 1823 இல் நெல்லூர் கலெக்டர் ப்ரேசர் வானவியல் (astronomy) கற்பிக்கும் பள்ளிகள் மட்டும் அங்கே ஐந்து இருந்ததைக் குறிப்பிடுகிறார். (வானவியல் என்பது ஜோசியம் அல்ல. ஜோசியம் கற்பிக்கப்பட்ட பள்ளிகள் நெல்லூர் மாவட்டத்தில் மட்டும் 3 இருந்தன.)

ஹிந்துக்களால் நடத்தப்பட்ட பள்ளிகள் 642 இருந்தன. ஆந்திரர் அதிகம் வாழும் இந்தப் பிரதேசத்தில் தமிழ் கற்பித்த பள்ளிகள் 4 இருந்தன. நீதி நூல்கள் கற்பிக்கப்பட்ட கல்விசாலைகள் 15 இருந்தன.

ஆங்கில பள்ளி, அதாவது கிறிஸ்தவ மிசினரிகள் நடத்திய பள்ளி ஒன்றே ஒன்றுதான் இருந்தது. [12]

ஆங்கிலேயர் கற்பிக்கும் முறைக்கும் பாரதீயர் கற்பிக்கும் முறைக்குமான அடிப்படை வேறுபாடு ஒன்றை பெல்லாரி கலெக்டர் அவதானிக்கிறார்:

gurukula

“அங்கே எழுத்துக்களை முதலில் வாயால் சொல்லிக் கொடுக்கிறார்கள். இங்கே (அதாவது இந்தியாவில்) குழந்தைக்கு முதலிலேயே எழுதச் சொல்லிக் கொடுத்துப் பிறகு பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள்.”

(The first business of a child on entering school is to obtain a knowledge of the letters, which he learns by writing them with his finger on the ground in sand, and not by pronouncing the alphabet as among European nations.. When he becomes pretty dexterous in writing with his finger in sand, he has then the privilege of writing either with an iron style on cadjan leaves, or with a reed on paper, and sometimes on the leaves of the aristolochia identica, or with a kind of pencil on the Hulligi or Kadata, which answer the purpose of slates. The two latter in these districts are the most common..)

அந்த வட்டாரத்திலேயே கிடைக்கும் பொருட்களின் அடிப்படையில் அங்கிருந்த கல்வி உபகரணங்கள் உருவாக்கப்பட்டிருந்தன என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். [13]

பாரதத்தின் இந்த முறை இன்றைக்கு மாற்றப்பட்டு விட்டது நாம் அனைவரும் அறிந்ததே. எழுதச் சொல்லிக் கொடுப்பதும் வாசிக்கக் கற்றுக் கொடுப்பதும் பிரிக்கப் பட்டுவிட்டன. ஆனால் கை சமிக்ஞைகளிலிருந்து, கை அசைவுகளிலிருந்து வாய் மொழிக்குச் செல்வது என்பதே உளவியல் முறையின்படி சரியானது. இந்த கை-அசைவுகளையும் வாய் மொழியையும் பிரித்துச் சொல்லிக்கொடுக்கும் மேற்கத்திய முறையானது ஆட்டிஸ குழந்தைகளுக்கு - பெரும் உளவியல் தடுப்பரணாக அமைந்துள்ளது. ஆட்டிஸ மனத்தடைகளை மீற குழந்தைகளுக்கு இயல்பான பயிற்சி முறையாக பாரதீயக் குழந்தைக் கல்வி முறை அமைந்துள்ளது. [14]

1823 இல் பெல்லாரி மாவட்டத்தின் கலெக்டர் எழுதிய அறிக்கை மிக முக்கியமான சில தரவுகளைக் கொண்டிருக்கிறது.

“குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க ஒரு சிறப்பான முறையை அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். நன்றாகக் கல்வி கற்றுவிட்ட குழந்தைகள் பிற குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கின்றனர் (சட்டாம் பிள்ளை முறை). இதன் மூலம் அவர்கள் தாங்கள் பிறருக்கு கற்பிப்பதுடன் தாங்கள் கற்ற கல்வியையும் நன்றாக உறுதிப்படுத்திக் கொள்ளும் இந்த முறை மிகச்சிறப்பானது. எனவே, அந்த முறை இங்கிலாந்தில் புகுத்தப்பட்டிருப்பது தகுதியானதுதான்.” [15]

இது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். அதாவது பிரிட்டிஷார் எப்படிக் கல்வியை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்வது என தவித்துக் கொண்டிருந்த போது, அந்தத் தவிப்பைப் போக்கிய கல்வி முறை சீர்திருத்தங்களுக்கான உள்ளீடுகள் பாரதத்திலிருந்து பெறப்பட்டன. ஆண்ட்ரூ பெல் என்பவரால் இந்திய முறை இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்கிறார் தரம்பால். [16](தரம்பால் இது குறித்து ஒரு சிறு குறிப்பு மட்டும் அளிக்கிறார். ஆனால், நாம் இது குறித்து கொஞ்சம் விரிவாகவே இங்கு பார்ப்போம்.)

தரம்பாலுக்குப் பிறகு இத்தகைய ஆராய்ச்சிகளில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. தரம்பாலின் நூலை தற்செயலாக ஒரு பழைய புத்தகக் கடையில் கண்ணுற்றார் ஜேம்ஸ் டூலி என்கிற ஆராய்ச்சியாளர். குறிப்பிட்ட தன்னார்வ அமைப்புகளின் புதிய கல்வி முறைகள் குறித்து ஆராய்ச்சி செய்பவர் அவர். இந்த அமைப்புக்கள் விளிம்புநிலை மக்களுக்கும் புறக்கணிக்கப்பட்ட மக்கள் சமூகங்களுக்கும் சர்வதேச அளவில் கல்வியை வளங்குன்றா வளர்ச்சியுடன் இணைந்து கொண்டு செல்பவை. அரசு சாராமல் மக்களாகவே தமது கல்வி நிலையங்களை நிதி நிர்வாகம் செய்து செயல்படுத்துவது குறித்து ஆராய்ச்சி செய்து வந்த ஜேம்ஸ் டூலிக்கு தரம்பாலின் நூல் புதிய கதவுகளைத் திறந்தது.

தரம்பாலின் நூலில் இருந்த சில செய்திகளை அடிப்படையாகக் கொண்டு அவர் இந்த ஆராய்ச்சியை விரிவுபடுத்தினார். அவர் எவ்வாறு பாரத கல்விமுறையை இங்கிலாந்து அந்த நாட்டில் கல்வியறிவு பெருக பயன்படுத்தியது என்பதை விளக்குகிறார்.

1797 இல் கிறிஸ்தவ பாதிரியாரான ரெவரண்ட் ஆண்ட்ரூ பெல் “மதராஸ் கல்வி முறை” என அழைக்கப்பட்ட இம்முறையை இங்கிலாந்தில் அறிமுகம் செய்தார். இது காட்டுத்தீயாக இங்கிலாந்தில் பரவியது. 1821 இல் இலண்டனைச் சுற்றி மட்டும் 300,000 இங்கிலாந்து குழந்தைகள் இந்த பாரதீய முறையால் கல்வியறிவு பெற்றார்கள்.[17]

இம்முறை Peer-learning எனும் பெயரில் ஜோஸப் லங்காஸ்டரால் (Jospeh Lancaster) அவரது புகழ்பெற்ற லங்காஸ்டர் பள்ளிகளில் இதே கல்விமுறை அறிமுகப் படுத்தப்பட்டது. இது லங்காஸ்டருக்கும் பெல்லுக்கும் இடையில் மனக்கசப்பை ஏற்படுத்தியது.

பெல் தமது “கண்டுபிடிப்பை” அவர்தான் செய்தார் என்று நிறுவுவதற்காகத் தான் கொண்டு வந்த பாரதிய கல்வி முறையை தொகுத்து 1823 இல் நூலாக வெளியிட்டார். இவர் வெளியிட்ட புத்தகத்தின் பெயர் கொஞ்சம் நீளம்தான். மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்:

Mutual tuition and moral discipline; or, Manual of instructions for conducting schools through the agency of the scholars themselves: For the use of schools and families. With an introductory essay on the object and importance of the Madras system of education; a brief exposition of the principle on which it is founded; and a historical sketch of its rise, progress, and results

இக்கல்வி முறை சென்னையில் மட்டுமல்ல பாரதத்தின் மேற்கு கடற்கரை மாகாணங்களிலும் செயல்பட்டது ஐரோப்பிய யாத்திரீகர்களாலும் ஆவணப் படுத்தப்பட்டுள்ளது.

1623 இல் பீட்டர் டெல்லா வாலே (Peter Della Valle) என்கிற அதிகாரி இந்தக் கல்வி முறையை சிலாகித்து எழுதுகிறார்.

“சிறுவர்கள் இசையுடன் கூடிய கணித வாய்ப்பாடுகளைக் கற்கிறார்கள். எழுதிப்படிக்க அவர்கள் பேப்பர்களை வீணடிப்பதில்லை. அதற்காகவே அருமையாக மணலைக் குவித்துத் தரையில் பரப்பி அதில் எழுதிப் பார்க்கிறார்கள்.” [18]

ஆக பாரதம் முழுவதும் பரவியிருந்த கல்விமுறையைத்தான் ஆண்ட்ரூ பெல் “மதராஸ் கல்வி முறை” எனக் கருதினார் என்பது தெளிவு.

225px-thomas_babington_macaulay_baron_macaulayபாரத பாரம்பரிய கல்வி அமைப்பை அப்படியே அரசு உதவி கல்வி அமைப்பாக மாற்ற முடியுமா என மன்ரோ முயற்சி செய்து தோல்வியுற்றார்.

இந்நிலையில்தான் இந்திய கல்விச்சூழலில் மற்றொரு நபர் நுழைந்தார். அவர் பெயர் தாமஸ் பாபிங்க்டன் மெக்காலே.

மெக்காலே பாரம்பரிய இந்திய கல்வி முறையை கடுமையாக வெறுத்தார். அவர் இந்தியப் பண்பாடு ஏதுமற்ற மூடநம்பிக்கையின் தொகுதி மட்டுமே என மனதாரக் கருதினார்.

“இந்தியர்களின் வானவியல் அறிவு இங்கிலாந்தின் போர்டிங் பள்ளி மாணவிகளிடையே கூட ஏளனச்சிரிப்பை உருவாக்கும்” என்றும் “முழு சமஸ்க்ருத இலக்கியங்களின் வரலாற்று மதிப்பும் தொடக்க நிலை மாணவர்களுக்காக மிகவும் நீர்த்துப் போகச்செய்யப்பட்ட ஆங்கில இலக்கியங்களின் மதிப்பைக் காட்டிலும் குறைவு” என்றும் கருதியவர் அவர். 1854 இல் இந்தியாவில் முதன் முதலாக மெக்காலே முறை பள்ளிகள் திறக்கப்பட்டன. [19]

1858 இல் சென்னை மாகாணத்தில் (மெட்ராஸ் பிரசிடென்ஸியில்) மட்டும் 21 மாவட்டங்களில் முழுக்க முழுக்க அரசு கட்டுப்பாட்டில் அமைந்த 452 கல்விச்சாலைகள் (கல்லூரிகளும் பள்ளிகளுமாக) ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில் 20,874 மாணவர்கள் பயின்றார்கள். இதே சென்னை மாகாணத்தில்தான் 36 ஆண்டுகளுக்கு முன்னதாக 11,575 பள்ளிகளும் 1094 உயர் கல்விசாலைகளும் (ஜேம்ஸ் டூலி இவற்றைக் கல்லூரிகள் என்றே குறிப்பிடுகிறார்.) இருந்தன என்றும், அவற்றில் முறையே 1,57,915 மாணவர்களும் 5,431 மாணவர்களும் கல்வி கற்றார்கள். மொத்த மக்கட் தொகைக்கும் கல்விச்சாலை செல்பவர்களுக்குமான விகிதம் 1822 இல் இருந்த நிலையை எட்ட மெக்காலே கல்வி முறையில் அறுபது ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. [20]

இதே காலகட்டத்தில் இங்கிலாந்தின் கல்வி நிலை என்னவென்று காணலாம். 1820களில் இந்தியாவின் பாரம்பரிய கல்விமுறை எவ்வித பொருளாதார அமைப்பில் அமைந்திருந்ததோ அதே போன்ற ஒரு பொருளாதார ஆதரவு கொண்ட -அதாவது தனிப்பட்ட கொடைகள் தரும் அமைப்புகள் மூலமாக- கல்வி இங்கிலாந்தில் பரப்பப்பட்டது. 1851 இல் 2,144,278 குழந்தைகள் பள்ளிகளில் படித்தனர். இந்த பள்ளிகளின் நிதி நிர்வாகம் முழுக்க முழுக்க இந்திய முறையில் அமைந்திருந்தது. 1820 களில் இருந்து 1850 வரை நாற்பது ஆண்டுகளில் இங்கிலாந்தின் கல்வியறிவு அதிகரிப்பு 318 சதவிகிதம் ! ஆனால், 1825 இல் சென்னை மாகாணத்தில் இந்திய பாரம்பரிய கல்வி அமைப்பு தகர்ந்ததிலிருந்து 1885 வரைக்குமான அறுபது ஆண்டுகளில் இந்தியாவில் சென்னை மாகாணத்தில் கல்வியறிவு அதிகரிப்பின் சதவிகிதம் 265 சதவிகிதம்.

india-educationஅதே நேரத்தில் இங்கிலாந்தில் கல்வி அமைப்பில் அரசாங்க கட்டுப்பாடு குறைவதற்கான சூழல் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இந்தியாவிலோ நேர் எதிர்.

இங்கிலாந்தைப் போலவே இந்தியாவின் பாரம்பரிய கல்வி அமைப்பு அதன் நிதி நிர்வாகம் ஆகியவை குளறுபடி செய்யப்படாமல் இருந்திருந்தால், இங்கிலாந்தின் கல்வியறிவு வேகத்துக்குச் சமமாக இந்திய கல்வியறிவும் வளர்ந்திருந்தால் சென்னை மாகாணத்தில் மட்டும் நாற்பதாண்டுகளில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 5,17,151 ஆக உயர்ந்திருக்கும். இந்த கல்வியறிவு எண்ணிக்கையை சென்னை மாகாணம் 1885 இல் கூட எட்டவில்லை. 1896 இல்தான் எட்டியது - அதாவது 71 ஆண்டுகளுக்குப் பின்னர் ! [21]

பாரதத்தின் கல்வியறிவு அமைப்புகள் முழுக்க முழுக்க மேற்கத்திய பிரமிடு அமைப்பாக மாறி கல்வியறிவு பரவும் வேகம் தடைப்பட்டது.

இக்காலகட்டத்தில் கல்வி அறிவு பெற்ற பெரும்பாலான மக்கள் சமுதாயத்தின் மேலடுக்கு மக்களே -அதாவது இன்று நாம் ஆதிக்க சாதியினர் என அடையாளம் காணும் மக்களே. ஏழை மக்களுக்குப் பாரத பாரம்பரிய அமைப்பில் இயல்பாகவும் ஜனநாயகத் தன்மையுடனும் கிட்டிய கல்வியறிவு, எழுத்தறிவு, பாரம்பரிய வரலாற்றறிவு ஆகியவை மெக்காலே கல்வி முறையினால் மதிப்பிழந்தன.

இவ்விதத்தில் பாரதத்தில் நிலையூன்றப்பட்ட மெக்காலே கல்வி நிறுவனங்கள் பழைய பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்களைப் பிரதியெடுத்தன. சமுதாயத்தின் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மேல்கல்வி நிறுவனங்களுக்குள் நுழைய முடியாத தடை இங்கிலாந்துக் கல்வி நிறுவனங்களில் இருந்தது. பொருளியலாளர் க்ளார்க் கெர் (Clark Kerr) இது குறித்து கூறுகிறார்:

“19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை பிரிட்டிஷ் உயர் கல்வி முறையானது மேலடுக்கு மக்களுக்கு உரியதாகவே இருந்தது. அதுவும் பெரும்பாலும் பிறப்படிப்படையில் மேலடுக்கில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமே உரியதாக அமைந்திருந்தது. ஆக்ஸ்போர்டிலும் காம்ப்ரிட்ஜிலும் நுழைவது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட விஷயமாக அமைந்திருந்தது. ஆங்கிலிக்கன் சபை உறுப்பினர்களாகவும் பெரும்பாலும் மேல்சாதி பிரபுத்துவ குடும்பங்களைச் சார்ந்த ஆண்மக்களாகவும், மேல்-நடுத்தர வகுப்போராக இருப்போர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்….ஆப்பிரிக்கக் காலனிய நாடுகளில் தொடங்கப்பட்ட மிஷினரி கல்விசாலைகளில் பிரான்ஸிலும் பிரிட்டனிலும் வழக்கில் இருந்த இதே மேல்சாதி கல்விமுறையே அமுல்படுத்தப்பட்டது.” [22]

கெர் ஆப்பிரிக்க காலனிகள் குறித்து கூறுவது நம் நாட்டுக்கும் பொருந்தும் என்பதே உண்மை.

சுருக்கமாகச் சொன்னால் வெள்ளைக்காரர்கள் பெற்ற கல்வியறிவு பாரத பாரம்பரிய கல்வி அமைப்பு அவர்களுக்குக் கொடுத்த கொடை.

இந்தியக் கல்வி முறையில் தலையிடாமல் பாரத பாரம்பரிய முறைக் கல்வியையே பிரிட்டிஷார் தொடர்ந்திருந்தால், பரிணமித்து வளர்த்திருந்தால், பாரதம் நிச்சயமாக மேலும் சிறப்பாகவும் அதிக பரவலாகவும் கல்வி அறிவு பெற்றிருக்கும். இதைக் குறைந்தது இந்தியர்களாவது உணர்ந்தால் சரி.

இப்போது நாம் கல்வியறிவை இந்தியாவில் உள்ள அனைத்துத் தர மக்களுக்கும் பரப்பச் செல்லவேண்டிய தூரம் இன்னும் மிக அதிகம் என்பதில் ஐயத்துக்கு இடமில்லை. அதனைச் செயல்படுத்த நமக்கு நம் கல்வி அமைப்பின் அதன் பரிணாம வளர்ச்சியின் வீழ்ச்சியின் வரலாறு தெரிய வேண்டும்.

att00028

இன்றைக்கு ஹிந்து அமைப்புகள் ஓராசிரியர் பள்ளிகளை பாரதமெங்கும் இருக்கும் புறக்கணிக்கப்பட்ட நம் சகோதர சகோதரிகள் வாழும் இடங்களுக்கு கொண்டு செல்கிறது. அரசு சாரா சமூகக் குழுமங்கள் சார்ந்த ஒரு கல்வியியல் பரிசோதனை இது. ஒருவிதத்தில் நாம் இழந்த அந்த அழகிய மரத்தை மீண்டும் உருவாக்கும் ஒரு பகீரத முயற்சியாகவே இது காணப்பட வேண்டும்.

ஆனால், அன்று மெக்காலேயும் பிரிட்டிஷ் அரசும் பாரத சுதேசிய கல்வி முறையை எதிர்த்தது போலவே இன்று அன்னிய மதமாற்ற அமைப்புகளும் போலி-மதச்சார்பின்மை பேசும் அரசு இயந்திரமும், வாக்குவங்கி அரசியல்வாத சக்திகளும் இக்கல்வி முறையை எதிர்க்கின்றன. இந்த எதிர்ப்பு காலனிய காலத்தில் இருந்து தொடரும் சுரண்டல் சக்திகளின் தற்கால உருவம்.

dharampal_mku8ign8kufr

பின்குறிப்பு: இந்தியாவிற்காக அற்புதப் பணிகளை ஆற்றிய காந்தியவாதிகளுள் தரம்பால் முக்கியமானவர். அவரைப் பற்றிய தளம் தரம்பால்.நெட். பாரதத்தின் கல்வி, பொருளாதாரம், அறிவியல் மேன்மைகள் குறித்துத் தரமான ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். அவை அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டியவை.
தரம்பாலின் சிந்தனைகள் பற்றி அறியவும், தரவிரக்கம் செய்து படிக்கவும் இந்தத் தளத்தைப் பாருங்கள்: தரம்பாலின் பதிப்பிக்கப்பட்ட படைப்புகள்.

சான்றுகள்:

1 Hansard , 13 July 1807, quoted in John Rule, The Labouring Classes in Early Industrial England 1750-1850: Chapter 10: Education for the labouring classes, Longman 1986, p 235

2 Roland H. Bainton, Here I Stand: A Life of Martin Luther, Hendrickson Publishers, 2009, p.283-4

3 William Stang, The Life of the Martin Luther, BiblioBazaar, LLC, 2009, p. 62

4 R. Johnson, ‘Educational policy and social control in early Victorian England’, Past and Present, no.73, 1976: quoted in John Rule, The Labouring Classes in Early Industrial England 1750-1850: Chapter 10: Education for the labouring classes, Longman 1986, p.246

5 J.G.Rule, “The Labouring Miner in Cornwall circa. 1740-1870: a study in social history’, PhD Thesis, University of Warwick, 1971, pp.324-6

6 P.Gaskell, Artisans and Machinery, 1836, pp.243-4: quoted in R. Johnson, ‘Educational policy and social control in early Victorian England’, Past and Present, no.73, 1976: quoted in John Rule, The Labouring Classes in Early Industrial England 1750-1850: Chapter 10: Education for the labouring classes, Longman 1986 p.248

7 R. Johnson, ‘Educational policy and social control in early Victorian England’, Past and Present, no.73, 1976: quoted in John Rule, The Labouring Classes in Early Industrial England 1750-1850: Chapter 10: Education for the labouring classes, Longman 1986, p.249

8 C.T.Trevail quoted in: R. Johnson, ‘Educational policy and social control in early Victorian England’, Past and Present, no.73, 1976: quoted in John Rule, The Labouring Classes in Early Industrial England 1750-1850: Chapter 10: Education for the labouring classes, Longman 1986, p.249

9 Dharampal, The Beautiful Tree, Other India Press, 1983:2000, p.375

10 Dharampal, The Beautiful Tree, Other India Press, 1983:2000, p.375

11 Collector, Madras To Board Of Revenue: 13.11.1822 (Tnsa: Brp: Vol.931, Pro.14.11.1822 Pp.10, 512-13 No.57-8): Dharampal, The Beautiful Tree, Other India Press, 1983:2000 p.129

12 Collector, Nellore To Board Of Revenue: 23.6.1823 (Tnsa: Brp: Vol.952, Pro.30.6.1823 Pp.5188-91 No.26): Dharampal, The Beautiful Tree, Other India Press, 1983:2000 p.155

13 Collector, Bellary To Board Of Revenue:17.8.1823 (Tnsa: Brp: Vol.958 Pro.25.8.1823 Pp.7167-85 Nos.32-33): Dharampal, The Beautiful Tree, Other India Press, 1983:2000 p.188

14 William C. Stokoe, Language in hand: why sign came before speech, Gallaudet University Press, 2001, p.88

15 Collector, Bellary To Board Of Revenue:17.8.1823 (Tnsa: Brp: Vol.958 Pro.25.8.1823 Pp.7167-85 Nos.32-33): Dharampal, The Beautiful Tree, Other India Press, 1983:2000, p.190

16 Dharampal, The Beautiful Tree, Other India Press, 1983:2000, p.10

17 James Tooley, The Beautiful Tree: A Personal Journey Into How the World’s Poorest People Are Educating Themselves, Cato Institute, 2009, p.230

18 James Tooley, The Beautiful Tree: A Personal Journey Into How the World’s Poorest People Are Educating Themselves, Cato Institute, 2009, p.227 & Dharampal, The Beautiful Tree, Other India Press, 1983:2000, p 262

19 James Tooley, The Beautiful Tree: A Personal Journey Into How the World’s Poorest People Are Educating Themselves, Cato Institute, 2009, p.235

20 James Tooley, The Beautiful Tree: A Personal Journey Into How the World’s Poorest People Are Educating Themselves, Cato Institute, 2009, p.235

21 James Tooley, The Beautiful Tree: A Personal Journey Into How the World’s Poorest People Are Educating Themselves, Cato Institute, 2009, p.238

22 Clark Kerr, The Great Transformation in Higher Education, 1960-1980, SUNY Press, 1991,p.8

1 comment:

Think Why Not said...

Superb Analysis... Did u submit this as a paper anywhere...